
யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் கொரோனா இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரச அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும், விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி, நகர சுத்தப்படுத்தல்கள், மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனாத் தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

