
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சமலன் குடா வயல் வெளிக்குள் இரவு வேளை உட்புகுந்த காட்டு யானைகள் விளைந்த நிலையில் அருவடைக்கு தயாராக காணப்பட்ட வேளாண்மையை காட்டு யானைகள் சாப்பிட்டு சேதப்படுத்திச் சென்றுள்ளது.
இதில் சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மை செய்கை காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.
கடன்பட்டு, நகைகளை வங்கிகள் அடகு வைத்து, இரசாயன உரமின்றி மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் செய்த வேளாண்மையை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளமையால் தாம் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நஷ்டமடைந்துள்ள தமக்கு அரசாங்கம் நஷ்டஈட்டினை பெற்றுத்தருவதோடு, காட்டு யானைகள் மீண்டும் வயல் நிலங்களை சேதப்படுத்தாமல் இருக்க யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும் சம்பூர் – சமலன் குடா வெளி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.