போராட்டத்திற்கு உதவியவர்களை கைது செய்வதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் யாழில் நேற்று (செவ்வாய்கிகிழமை)  நடத்திய ஊடக சந்திப்பின்போதே சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த வாகனப் பேரணியை குழப்புவதற்கு பொலிசார் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இந்த தடைகளை மீறி எமது பேரணி திட்டமிட்டவாறு நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைக் குழப்பும் பொலிஸாரினதுவும் அரசினதும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து பேரணிக்கு அழைத்து வந்த வாகனத்தையும் ஒலி, ஒளிபரப்பு செய்த உரிமையாளர்களையும் பொலிஸார் விசாரணை செய்வதும் கைது செய்வதுமான பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பி குழப்புகின்ற பொலிசாரின் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டத்திற்கு உதவிய வாகனத்தின் சாரதியையும் ஒளிபரப்பு சேவை வழங்கியவர்களையும் கைது செய்வதையோ விசாரணை செய்வதையோ பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *