கஸகஸ்தான் போராட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,678பேர் கைது!

கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த நாடு இதுவரை கண்டிராத இந்தத் தீவிர போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் விலையை அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் புரட்சி வெடித்தது.

பின்னர் அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் மக்கள் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

இதில் அல்மாட்டி நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை, மேயர் அலுவலகம் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அல்மாட்டி நகரில் அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டது.

நாட்டில் நடந்த வன்முறை ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முயற்சி என ஜனாதிபதி காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த சதி முன்னாள் சோவியத் நாடுகளின் இராணுவ கூட்டணி தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். எனினும் அவர் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *