ராஜபக்ச அரசு தோற்றுவிட்டது, மாற்றத்துக்கு வலுச்சேருங்கள் யாழில் சஜித் தெரிவிப்பு!

தற்போதைய ராஜபக்ச அரசு தோற்றுப்போன அரசு. ஜனாதிபதி, பிரதமர் மட்டுமன்றி அமைச்சர்களும் தோற்றுவிட்டார்கள். நாடு சீர்கெட்டுப்போயுள்ளது. எனவே, சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் எங்களுடன் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் = நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டின் அரசாங்கமானது மக்களில் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக செயற்பட வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து பொருள்களைக் கொள்வனவுசெய்து நாட்டு மக்களுக்கு வழங்க முடியாமல் ராஜபக்ச அரசு திண்டாடுகிறது.
தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, தற்பொழுது மக்கள் வாழமுடியாதநிலைக்கு அவர்களை அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது.

குறிப்பாக உணவு, பானங்களை நாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை காணப்படுகின்றது. குழந்தைகள், தாய்மாருடைய போசாக்கு மட்டம் குறைந்திருக்கிறது. அவர்களுக்குரிய பால் மா மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் கோத்தாபய அரசு காணப்படுகின்றது. மக்கள் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.

வெற்றிகொள்வதற்கு வீர தீரமான அரசு, புத்திசாலித்தனமான அரசு எனக்கூறி வாய்ச்சவாடல்விட்டபோதும் தற்பொழுது அரசு பலமில்லாத அரசாங்கமாக மாறியுள்ளது.
இந்த அரசு முற்றுமுழுதாக பெயிலான அரசாங்கம் என்றுதான் கூறவேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஒரு பலமான அரசை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.
குறிப்பாக நமது ஆட்சியில் இனவாதம் மதவாதம் மற்றும் ஒரு துண்டு நிலம்கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் எங்களுடன் ஒன்றுபட வேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *