பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதிய தொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!

தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கிணங்க, பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதியதொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்.

இதற்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை, தற்போதிலிருந்தே நாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும். நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வேண்டும்.

நாட்டு மக்கள் இன்று எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எம்மை பொறுத்தவரையில் இந்த அரசு வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வழி பிறக்கும்.

அதேவேளை, உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகும்.

உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையும் நாம் கண்டிக்கின்றோம். அது எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை.

அரச ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் சூழ்நிலை இல்லை. தோட்டக்கம்பனிகள் கைவிரிக்கும் நிலையிலேயே உள்ளன. எனவே, அம்மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசு முன்வரவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *