
திருகோணமலை – சீனக்குடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (13) வியாழக்கிழமை இடம்பெறுள்ளது.
தேசிய உடைமைகள் விற்பதற்கு எதிரான பெட்ரோலியம் துறைமுகம், மின்சாரம் ஒன்றிணைந்த கூட்டணியினரினால் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், எங்களுடைய எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்காதே, எண்ணெய் தாங்கிகள், துறைமுகங்கள் மின்சாரம் முதலான தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தீர்க்கும் அரசாங்கத்தைத் துரத்துவோம், அரசாங்கமே தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தின்னாதே என்ற சுலோகங்களை ஏந்தியவாறும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இவ்வாறு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்குத் தனது எதிர்ப்பினை தெரிவித்து விட்டு தற்போது ஆட்சியில் இருக்கும்போது இவ்வாறு நடந்து கொள்வது முறையற்ற செயல் எனவும் இதன்போது கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
இவ்வாறு இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணியின் தேரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை விற்பனை செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கையொப்பமும் சேகரிக்கப்பட்டது.