
நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல், ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஒவ்வொரு முறையும் தலைமை பொறுப்பை ஏற்கின்றார். இதற்கூடாக இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தலைவராக அவர் விளங்குகின்றார்.
தப்பித்தவறியேனும் சஜித் பிரேமதாஸ நாட்டின் ஜனாதிபதியாகியிருந்தால் என்ன நடந்திருக்கும். நாட்டு மக்கள் விசமருந்தி மரணிக்க நேரிட்டிருக்கும்.
அவர் நடிப்பது தெளிவாக தெரிகிறது. ஒருபுறம் வயலுக்கு சென்று குடையில்லாமல் நிற்கிறார். மழையில் நனைந்து மக்கள் பணியாற்றுகின்றார். மறுபுறம் சங்ரில்லா ஹோட்டலில் புதிய வியாபாரமொன்றை ஆரம்பித்து விருந்துபசாரத்தை நடத்துகின்றார்.
மக்களுக்கு போலியான விம்பத்தைக் காண்பித்து மறுபுறத்தில் வேறு ஒரு பயணத்தை முன்னெடுக்கின்றார்.
எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஸ்கரிப்புகள், போராட்டங்கள என்பவற்றுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள்? உண்மையில் இவை மக்களின் பிரச்சினையா? தொழிற்சங்கவாதிகளின் பிரச்சினையா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுகின்றோம்.
போராட்டங்களின் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிவதற்காக குழுவொன்றை நியமியுங்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
70 வருடங்களாக நாட்டுக்கு முட்டுக்கட்டை இடப்பட்டு வருகின்றது.
நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டியது அவசியமாகும்.