
தை பிறந்தால் வழிபிறக்கும் என்று புதிய நம்பிக்கை பொங்கி, தமிழர் தாயக நிலத்தில் தமிழராட்சி தழைத்திட நாமெல்லாம் ஒன்றுபட்டு, திடசங்கற்பங் கொண்டு பொங்கித்தானாக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில்..
மனிதகுலம் தோன்றிய காலமுதல் உழுதுண்டு உயிர் வாழும் உழைக்கும் மக்களில் தமிழர்களாய் ஒரு மனித குல நாகரிகம் உருவாகிய காலமுதல் இயற்கையை வழிபடும் நாகரிகம் போற்றப்பட்டு வந்துள்ளமை வரலாறு.
இயற்கையில் சூரியனால் ஒளியும் பகலும் அதனால் மழையும் நீர்நிலைகளும் வெட்பதட்ப நிலை காலங்களும் வேளாண் தொழில் துறையும் மக்கள் உழுதுண்டு வாழ வழியும் அதற்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் பண்பாடும் தமிழர் நாகரிகமாய் போற்றப்படுவதே தைப்பொங்கல் விழாவாகும்.
அதனால் தான் வரப்புயர, நீர் உயர, நெல் உயர, குடி உயரக் கோன் உயரும் என்று சான்றோர், ஆன்றோர் பகர்ந்தனர்.
உழைக்கும் மக்கள் ஆட்சி முறை பற்றியும் நாட்டின் ஆட்சி உயர்ந்து வளம் பெற்று நல்லாட்சிநடைபெறுவதும் அதுவே நாகரிகம் என சான்றாண்மைக்கு வரைவிலக்கணம் வகுக்கப்பட்டது.
ஆண்டுதோறும் மழையும் நீர்நிலையும் நிலவளமும் நெல்விளைச்சலும் மார்கழியில் நிறைந்து அறுவடையின் பின் தை பிறக்கும் காலம் தைத்திங்களில் குடிகளில் செல்வம் நிறைவதால் வளம்பெறும் மக்கள் விழாவெடுத்துக் கொண்டாடும் வழமையின் அடையாளமே நாகரிகத்தின் பிரதிபலனே’ தை பிறந்தால் வழி பிறக்கும் எனத் தைத்திங்களிலே மக்கள் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
உழைக்கும் தமிழர் வாழும் உலகெங்கும் தை பிறந்ததும் முதல் நாளிலே தோரணமும் மாவிலையும் கட்டி,இயற்கைக்கு நன்றி தெரிவித்து வேளாண் நிலத்தின் நெல் விளைச்சலில் புத்தரிசியும் மாட்டின் பாலும் கரும்புச் சாறும், சுவை தரும் முந்திரி ஏலம் முதலானவும் கலந்து பொங்கல் புதுப்பானையில் மூட்டிய தீச்சுவாலையில் கொதிக்க வைத்துப் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கலென்று கூவி ஆதவனை வணங்கி பொங்கல் படைத்து கூடி நிற்கும் மக்களும் மாடும் கூடி நிற்கும் வேளை இதயம் பொங்கி மகிழ்ச்சியில் திழைத்திடும் மக்கள் வேளாண் மக்கள் தைப்பொங்கல் பொங்கிக் கொண்டாடுவர்.
அடுத்த நாள் இரண்டாம் நாள் ‘மாடு என்றாலே செல்வமே!’ உழவுக்கும் தொழிலுக்கும் ஏர்பூட்டி உழும் மாடுகளை நன்றியுடன் தொழும் நாகரிகம் வேளாண் தமிழர்களிடத்திலே விளைந்தது தான் மாட்டுப் பொங்கல்.மூன்றாம் நாளிலே காணும் பொங்கல் கடலோரங்களில், ஆற்றோரங்களில், நீர்நிலைகளில் வெண் மணல் நிலம் நிறைவெளிகளில் மகிழ்ச்சி பொங்கும் மக்கள் ஒன்றுகூடி ஆடிப்பாடி அரவணைத்து ஒன்றாய் நின்று கொண்டாடி நட்பும், அன்பும், பண்பும் புதியவர் பழையவர் உறவினர் எல்லாம் கண்டு களிக்கும் கொண்டாட்டமே காணும் பொங்கல் என்றாகும்.
இவையெல்லாம் தமிழர் தொன்மை நிறைபாரம்பரியமாய் பண்பட்ட நாகரிகமாய் உலகம் போற்ற வாழும் வாழ்க்கை தமிழர் வாழ்க்கை.
வாழ்க எனப் போற்றுவோம்.
தைப்பொங்கல் விழாவெடுக்கும் தமிழர் பண்பாட்டை நாகரிகத்தைப் போற்றினோம், மனமகிழ நினைவு கொண்டோம்.
ஆனால் இன்று வரப்புயர நீர் உயர நெல் உயர கோன் உயரவில்லை, குடி உயரவில்லை, விளைச்சலில்லை செல்வம் திரளவில்லை, பசியும் பட்டினியும் உயிர்களைக் காவு கொள்ளும் கொரோனா ஊழிக் கொடுநோய் பரவலும் கோனில்லாக் குடிகளாய் உயிருக்காய் போராடும் காலமாய் மக்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்.
அதிலும் இலங்கைத் தமிழர் விடுதலையின்றி அடிமைத்தளை அறுக்கப் போராடி மடியும் மக்களாய் ஆட்சி இன்றி ஆளும் நிலமின்றி வாழும் உரிமையற்று விடிவின்றி புத்தரிசிப் பொங்கலின்றி இதயம் பொங்காத ஏதிலிகளாய் வீழ்ந்து கிடக்கின்றோம்.
விடிவு தான் எப்போது என ஏங்கி நிற்கும் தமிழ்க் குலமே என்ன செய்ய நினைக்கிறாய்? தை பிறந்தால் வழிபிறக்கும் என்று புதிய நம்பிக்கை பொங்கி, தமிழர் தாயக நிலத்தில் தமிழராட்சி தழைத்திட நாமெல்லாம் ஒன்றுபட்டு, திடசங்கற்பங் கொண்டு பொங்கித்தானாக வேண்டும்.
இதயம் பொங்கிடுவோம், வாழ்க, வளமுடன்’ என மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.