
வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த விபத்துக்குள்ளான பேரூந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு அதிசொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


