
லங்கா ஹொஸ்பிட்டல் – பொரள்ளை தேவாலயம் பகுதிகளில் மீட்கப்பட்ட கைக்குண்டு சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்திற்கும், பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் பின்னணியில் சூழ்சியாளர் ஒருவர் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (14) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நபர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த பிரதான சூழ்ச்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.