
மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 12 – 25 வீதமானவர்கள் ஓமிக்ரான் பிறழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,
ஒமிக்ரான் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கலாம்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடைசியாகப் பதிவாகியதிலிருந்து ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
எனவே அவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
முதலாம் மற்றும் இரண்டாவது டோஸைப் பெறாத ஒரு நபர், அந்தந்த சுகாதார மருத்துவ அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, தடுப்பூசியை பெறுமாறும் அவர் வலியுறுத்தினார்.
ஓமிக்ரான் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.