
இலங்கை கடற்பரப்புக்குள் கடந்த வருடம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மூலமாக ஏற்பட்ட சேதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட இழப்பீட்டு தொகையின் முதல் தவணை பணம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப் பெறவுள்ளது.
இதனை கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் 2.15 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதில் கடல் சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கே இந்த இழப்பீடு தொகை கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கப்பலிருந்து தீப்பற்றிய கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்களில் இதுவரையில் 70 வீதமானவை அகற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்துள்ளார்.