
மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகவத்தை கடலில் நேற்று குளிக்கச் சென்ற மாணவர்களில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.
இதில், பாடசாலை வீதியை சேர்ந்த எஸ்.அக்சயன் (வயது 16) என்ற மாணவனின் சடலம் கிடைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை எட்டு மாணவ நண்பர்கள் குளிக்கச் சென்றதில், அவர்களில் மூவரை கடல் அலை அடித்துச் சென்ற சமயம் ஒருவர் தத்தளித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு மாணவர்கள் காணமல்போயிருந்தனர்.
இந்நிலையில், குறித்த மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கிரான் பிரதான வீதியை சேர்ந்த ஜீ.சிவானந்தன் (வயது 16) என்பவரது சடலம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
பொங்கல் தினத்தில் கிரான் தேசிய பாடசாலையில் ஓரே வகுப்பில் கல்வி பயிலும் 08 மாணவர்கள் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று; குளித்துள்ளனர்.
இவர்களில் மூவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிர் தப்பியுள்ளதுடன் அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மற்றவரது உடலை தேடும் பணியில் கடல் உயிர் பாதுகாப்பு படையினர் கல்குடா சுழியோடிகள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் கிரான் பிரதேச மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.