
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு சம்பூர் விளையாட்டு மைதானத்தில் பட்டிப் பொங்கல் தினமான இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றது.
இதனை சம்பூர் பகுதி இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
சம்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட காளைகள் அடக்குவதற்காக மைதானத்தினுள் விடப்பட்டன.
இவ்வாறு இறக்கப்பட்ட காளைகளின் கழுத்தில் பலகாரங்களும், பணமும் தொங்கவிடப்பட்டிருந்தன.
இவ்விளையாட்டை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்காண மக்கள் சம்பூர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.
காளை மாடுகளை அடக்குவதற்காக இளைஞர்கள், வயோதிபர்கள் என பலரும் போட்டி போட்டிருந்ததையும் காணமுடிந்தது.
காளை மாடுகளை அடக்கியோருக்கும் பணமும், பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனை காளை உரிமையாளர்களே வழங்கியிருந்தனர்.
சம்பூரில் ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை பட்டிப்பொங்கல் தினமன்று காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


