
தம்பலகாமத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 பயனாளிகளுக்கு 64 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் (16) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை பயனாளிகளிடம் கையளித்தார்.
சௌபாக்கியா நான்காம் வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மொத்தமாக 64 இலட்சம் ரூபா பெறுமதியான 18 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், நீர் இறைக்கும் பம்பி போன்ற உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் சித்திக், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



