ராஜபக்ஷக்களுக்கு எதிராக பண்டாரநாயக்கக்கள் போர்க்கொடி

இலங்கை எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் நிலவுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகவும் அவரது மூத்த சகோதரன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி கொழும்பு அரசியலில் புயலை வீசியுள்ளது. இதனையே இன்றைய ஆய்வில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

கொழும்பு – பொரளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கோட்டாபய அரசாங்கத்தையும் பொலிஸாரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்குத் திட்டமிடும் சிலரே நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகின்றது என்று காண்பிப்பதற்காக சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான நபர்கள் விரைவில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கொழும்பு அப்பலோ வைத்தியசாலையின் மலசலகூடத்திலிருந்தும், பொரளை தேவாலயத்திலிருந்தும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டமையின் பின்னணியில் பாரிய சதிகாரர்கள் உள்ளனர்.

இவர்கள் யார் என்பது வெகுவிரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஒரு விதமாகவும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டு மக்களைக் குழப்பியுள்ளனர் என்றே கூற வேண்டியுள்ளது.

நாட்டிற்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்வது தேசிய பாதுகாப்பு க்கு அச்சுறுத்தலாக அமையாதா என்பதை பாதுகாப்புச் செயலாளர் அறியவில்லையா அல்லது மக்கள் மத்தியில் இழந்த ஆதரவை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் ராஜபக்ஷக்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நியாயப்படுத்த ஆளும் தரப்பு முயற்சிக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் அறிய வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார இயங்குகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலின் புதிய அலைகள், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், விநியோக முறைகளில் ஏற்பட்டுள்ள சவால்கள், அதிகரித்துச்செல்லும் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் போன்ற காரணிகள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கையைப் பொறுத்தமட்டில் 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 சதவீதமாக அமையக்கூடும் என்று மதிப்பீடு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களம், இவ்வாண்டில் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட முக்கிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வெளியேறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

இதனை உறுதி செய்யும் முகமாக சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாஸவிடம் வினவிய போது:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று முற்றுமுழுவதுமாக மீறப்பட்டுள்ளது. எனவே பொறுமையிழந்த நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

பல முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்றும் பியதாஸ குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆளும் கூட்டணியிலிருந்து சுதந்திரக் கட்சி விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டால் சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் மாத்திரம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை. மாறாக சுமார் 16 பேர் வரை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து வெளியேறுவார்கள் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள புதிய பாராளுமன்ற அமர்வு ஆளும் கட்சிக்கு சவால்மிக்கதாகவே அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஆளும்கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பணவீக்க உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, மின் விநியோகத்தடை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இனியும் நீடிக்க இடமளிக்காது தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரத்தின் தற்போதைய எதிர்மறையான போக்கு சட்டத்தின் ஆட்சியிலும் நாட்டின் நிர்வாகத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு நிலைபேறான தீர்வை வழங்கக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட நிதிவழங்கல் கட்டமைப்புக்களின் உதவியை நாடவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மிகமோசமடைந்துவரும் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

தீவிரமடைந்துவரக்கூடிய நிதிநெருக்கடி காரணமாக பொதுமக்கள் மத்தியில் சமத்துவமின்மை ஏற்படுவதுடன் அவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதிலும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.

அதுமாத்திரமன்றி சமூகத்திலுள்ள வறிய அல்லது இயலுமை மிகவும் குறைவான தரப்பினரே தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கீகாரம் பெற்ற முக்கியமான அனைத்து தரப்படுத்தல் நிறுவனங்களாலும் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 85 சதவீதமாகக் கணிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடனளவு இப்போது 104 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதில் தோல்விகண்டிருக்கின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளக ரீதியாகவும் வெளியக ரீதியாகவும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நள்ளிரவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வெளியிட்டுள்ள கருத்துக்கள் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாகச் செயற்பட்டேன் என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி வகித்துக் கொண்டு அவர் நீதித்துறைக்கு வழங்கிய உயர் அந்தஸ்த்து நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்தது.

2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாரிய தாக்குதலுக்குள்ளானது என்றும் சிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஜனாதிபதி பதவிக் காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் நான் மதிக்கக் கூடிய மிகவும் சொற்பளவிலான நபர்களில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறப்பிடம் பெறுகிறார்.

நான் 3 தசாப்த காலமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்தில் சேவையாற்றிய காலத்திலும், உயர்நீதிமன்றில் சேவையாற்றிய காலத்திலும் அவரை நான் பெருமளவில் சந்தித்ததில்லை.

சேவையை அடிப்படையாகக் கொண்ட பொது நிகழ்வுகளிலும், பதவிப் பிரமாணங்களின் போதும் சந்தித்துள்ளேன்.

அதேபோல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலகட்டத்தில் இராஜதந்திர விவகாரங்கள் கையாண்ட விதம் இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதற்கும் ஒரு காரணியாக அமைந்தது.

1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாகச் செயற்பட்டேன். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு அவர் நீதித்துறைக்கு உயர்மட்ட நிலையை வழங்கினார். நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க அவர் வழங்கிய ஒத்துழைப்பு அதனூடாக உறுதிப்படுத்தப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது என மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை சிராணி பண்டாரநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியை மக்கள் முற்றாக வெறுக்கும் நிலை தீவிரமடைந்து வருவதோடு கோட்டாபயவின் ஆட்சி விரைவில் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 18 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *