
மலையக மக்களை பாதுகாத்து அவர்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று முக்கியதுவமிக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நோர்வூட் மைதானத்திற்கு வந்தது வரலாற்று முக்கியதுவமிக்கது.
அன்று பிரதமர் மோடிக்கு நீங்கள் கொடுத்த அன்பு, பாசம் என்பவை முக்கியமானவை. அதற்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மறப்பதில்லை அல்லவா? அதேபோன்றுதான் தாய் இந்தியா தனது பிள்ளைகளை ஒரு போதும் மறக்காது.
மலையக அபிவிருத்திக்காக தொடர்ந்தும் இந்தியா அதித சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது. முக்கியமாக நான்காவது கட்டத்தில் பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தை மலையகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.
மலையகத்தின் கல்வி துறையிலும் இந்தியா அக்கறையும் செயற்படுகின்றது. மலையக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்தியா வழங்குகின்றமை இதன் ஒரு பகுதியாகும்.
இதன் மூலம் சிறந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உறவின் உன்னதத்தை கூறும் தைப்பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி.- என்றார்.
நல்லாட்சியே மலையகத்துக்கு பொன்னான காலம்! திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு




