
10 வது வன்னியின் பெரும்போர் சமநிலையில் நிறைவடைந்தது. கிளிநொச்சி மகாவித்தியாலய அணி முதல் இனிங்சில் 9 விக்கட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை குவித்து முதல் இனிங்சை நிறைவு செய்தது.
குறித்த போட்டியானது கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமாகியது.
நாணயச்சுழற்சியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானிக்க புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது.
78.2 பந்து வீச்சு நிறைவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 188ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தது.
அதிகபட்சமாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த ம.தேனுஜன் 158 பந்துகளில் 07 நான்கு ஓட்டம் அடங்களாக 70 ஓட்டங்களைப்பெற்றார்.
சானுஜன் 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.பந்து வீச்சில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிசார்பாக அபிசாந்,பிரவிந்தன், ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 17.05 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 83 ஓட்டங்களுக்கு இரண்டு இலக்குகளை இழந்த நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானதும் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி 59.4 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 250 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது தமது முதல் இன்னிங்சை முடிவுக்கு வந்தனர்.
இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் 7 பந்துப் பரிமாற்றங்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை பெற்றிருந்த போது போட்டி நிறைவுக்கு வந்தது. இதன்போது போட்டி சமநிலையில் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
கிளிநொச்சி மகாவித்தியாலய அணி சார்பில் கதிர்ச்செல்வன் 109 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றார். சாத்வீகள் 37 பந்துகளை எதிர்கொண்டு 39 ஓட்டங்களையும், மயூரன் 53 பந்துகளை எதிர்கொண்டு 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சார்பில் நிருக்சன் 4 இலக்குகளையும், விதுசன் 3 இலக்குகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்
10வது வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் குறித்த போட்டியில் சிறந்த சகலதுறை வீரனாக கிளிநொச்சி மகா வித்தியாலய அணியின் தலைவர் ஜோ பிரவிந்தனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
கிளிநொச்சி மகாவித்தியாலய அணியின் கதிர்ச்செல்வனும், போட்டியின் ஆட்டநாயகனாக புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தின் எம்.தேனுஜனும், சிறந்த பந்து வீச்சாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் விதுசனும், சிறந்த களத்தடுப்பாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பற்றிக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த போட்டியின் நிறைவில் இரு அணியினரும் தமது நட்பினை வளர்க்கும் வகையில் ஒற்றுமையாக நடனமாடி மைதானத்தை அலங்கரித்தமை பலராலும் பாராட்டப்பட்டிருந்த காட்சிகள் எமது கமெராக்களில் பதிவாகின.
குறித்த செயற்பாட்டையும், பண்பினையும் விருந்தினர்கள் பரிசளிப்பு நிகழ்வில் பாராட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள், காசோலைகள், பதக்கங்கள் மற்றும் கிண்ணங்களை இன்றைய விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
போட்டி தொடரின் கிண்ணத்தினை வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ரி.ஜோன்குயின்றஸ் வழங்கி வைத்தார்.





