
ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்னும் சுதந்திரமான வாழ்வு இல்லை என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .
முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை கட்டியெழுப்பும் மக்கள் நலன் காப்பகத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம்.
இன்று அரசியல் வாழ்வில் கூட கௌரவமான நியாயமான நேர்மையான நிலைகளிலிருந்து பின்தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
இந்த தீவில் தேசிய இனமாகிய தமிழ் தேசிய இனத்தினுடைய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய சமூகக் கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது
இந்த பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதில் உலகத்தின் மிகப்பெரிய டயஸ்போராவாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
தங்களால் இயன்ற பொருளாதார வளங்களை பயன்படுத்தி வல்லமைகளை பயன்படுத்தி இங்கு வாழும் மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம்
ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்னும் சுதந்திரமான வாழ்வு இல்லை.
இலக்கு நோக்கி பயணிக்க கூடிய சக்தி வாய்ந்தவர்களாக நாங்கள் இல்லை. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாங்கள் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

