ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் ஜேர்மனியில் கைது!

ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பெர்லினில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தெரியாத அளவு பணத்திற்குப் பதிலாக குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவர் ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அவர் செவ்வாய்க்கிழமை பெர்லினுக்கு வெளியே போட்ஸ்டாமில் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது வீடு மற்றும் பணியிடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கை ஜேர்மனி வெளியுறவு அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறுகையில், ‘ஜேர்மனி மண்ணில் நெருங்கிய கூட்டாளியை உளவு பார்ப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் எங்கள் பிரித்தானிய நண்பர்களுடன் முழு ஒற்றுமையுடன் இருக்கிறோம்’ என கூறினார்.

பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் ஒன்றையொன்று உளவு பார்ப்பதற்காக ஜேர்மனியைப் பயன்படுத்தி வந்தன.

ஆனால், ஜேர்மனி ஒன்றிணைக்கப்பட்டு பனிப் போர் முடிவுக்கு வந்த பிறகு தற்போதுதான் முதல்முறையாக உளவுக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *