
இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் மூலம் இந்தியாவை நாங்கள் பயன்படுத்தி தீர்வை அடையவே முயல்கிறோம் என்று புளொட்டின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்ஸ அரசாங்கத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்காக இந்தியா தமிழ் அரசியலைக் கையாளும். பூகோள அரசியலுக்கு ஏற்றபடி – சீனாவின் வருகை – சீனத் தூதுவரின் வடக்கு வருகை – பூகோள அரசியலின் நெருக்கடி என்பவற்றால் – எப்போதும் இலங்கையை தன் பிடிக்குள் வைத்திருப்பதற்காக இந்தியா 13 குறத்து பேசுகிறதா அல்லது இதற்காகதான் தமிழ் தலைவர்களை வைத்திருக்கிறார்களா என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?’, என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்
‘இதை மறுபக்கமாகவும் பார்க்கலாம் அல்லவா? இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இருக்கக்கூடிய முறுகல் நிலை – சீனா இங்கு வந்துள்ள நிலைமை என இந்த நிலைமைகளில் இந்தியாவை பாவிக்க வேண்டும் என்று நாங்கள் – தமிழ் தலைவர்கள் – நானோ, செல்வமோ, விக்னேஸ்வரன் ஐயாவோ மற்றத் தலைவர்களோ யோசித்திருக்கலாம் அல்லவா?
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற நிலையும் இலங்கையில் வருகிறது. புதிய அரசமைப்பு பற்றி அரசாங்கம் சிந்தித்து வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டம் இருந்தால் மட்டுமே இந்தியா எதிர்காலத்திலும் தலையிட முடியும்.
இதன் மூலமே தமிழர்கள் இறுதி தீர்வை அடையவும் முடியும். புதிய அரசமைப்பு வந்தால் இந்தியா அதன்பின்பு தலையீடு செய்ய முடியாதிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.