
தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் மூத்த போராளி மாவீரன் கனியூட் மாசில்லாமணி டயஸின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தியா நோக்கிய கடல் பயணத்தின் போது, கடற்படையினருடனான மோதலில் தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் மூத்த போராளி மாவீரன் கனியூட் மாசில்லாமணி டயஸ் கடந்த 19-01-1986 அன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் குறித்த போராளியின் நினைவேந்தல் நிகழ்வு, மன்னார் பிரதேச சபையின் உறுப்பினரும், ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, அன்னாரது உருவ படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த மூத்த போராளி மாவீரன் கனியூட் மாசில்லாமணி டயஸின் புதல்வன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.








