கொழும்பில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவம்! – பிரதான சந்தேநபர் வீட்டிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு – பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் இருந்து கை குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் முழுமையான தகவல்களை வழங்க முடியும் பொலிஸ் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டார்.

எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் அவ்வப்போது அறிக்கைகள் கிடைக்கப்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், விரைவில் முழுமையான தகவல்களை வழங்க முடியும் என கூறினார்.

இதேவேளை, பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டில் இருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஆகியவை இருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 29, 25,41, 55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதனை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த 15ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *