ஜனாதிபதி மக்களுக்கு செய்த சத்தியத்தை துரதிஸ்டவசமாக நிறைவேற்ற முடியவில்லை! சமன்பிரிய ஹேரத் கவலை

மூன்றாண்டுகளுக்குள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் இந்நாட்டு மக்களிடம் சத்தியம் செய்தார். துரதிஸ்டவசமாக அவரால் அதனை செய்ய முடியாமல் போனது என்று, பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பொறுப்பேற்கும்போது இந்த நாடு பயங்கரவாதத்தை எதிர்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் எதிரியை உயிருடன் பார்த்தோம். அதேபோன்ற சவால்களுடனேயே 2019ஆம் ஆண்டும் இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்றோம்.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.

தற்போதைய நிலையில் 85 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் எமது நாடு உள்ளது.

உலகில் வேறு எந்த நாடுகளிலும் இவ்வாறான ஒரு எதிர்க் கட்சியை காண முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொதுவான பிரச்சினைகளின்போது எதிர்க் கட்சி அரசாங்கத்துடன் கைக்கோர்த்து நிற்கும். எனினும் இலங்கையில் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.

நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமையில், எதிர்க் கட்சி தேர்தலொன்றை எதிர்பார்த்து நிற்கின்றது.

9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஆரம்பித்து வைத்தார்.

மூன்றாண்டுகளுக்குள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் இந்நாட்டு மக்களிடம் சத்தியம் செய்தார். துரதிஸ்டவசமாக அவரால் அதனை செய்ய முடியாமல் போனது.

எனினும் நாம் அபிவிருத்திகளை நிறுத்தவில்லை. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொன்றாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *