யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஜனவரி 21, 22, 23ம் திகதிகளில்..!

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன், யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற தளம் என்றார்.

இந்த கண்காட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்ஈசிஎஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

அனைத்து பொதுமக்களையும் கண்காட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் தகவல் விபரங்களுக்கு www.jitf.lk ஐப் பார்வையிடவும் அல்லது 077-1093792 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும் என்றனர்.

இன்றைய ஊடக சந்திப்பின்போது வர்த்தக தொழில்துறை மன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சிக்கான அனுசரணையாளர்களும் இணைந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *