
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறை மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நா. அமைப்புடனான தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றில் இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெற்காசியாவுக்கான பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹ்மட்டிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
தெற்காசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹ்மட்டுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பு – வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற போதே பீரிஸ் இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
இரண்டு வெளிநாட்டு அமைச்சுகளுக்குமிடையே உத்தியோகபூர்வ ஆலோசனைகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் வலிமையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கூட்டாண்மைக்கு ஏற்ற வகையில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையிலான கலந்துரையாடல்களும் இதன்போது மையப்படுத்தப்பட்டன.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதத்தடைச் சட்டம் மற்றும் அதன் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கு சபை மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 க்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் ஆகியவற்றில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அஹ்மட்டிடம் விளக்கினார்.
அனைத்தையும் உள்ளடங்கிய வகையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறை மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நா. அமைப்புடனான தொடர்ச்சியான ஆக்கப்பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடு தலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்தமை உட்பட, பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக அரசின் ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.