
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகள் மீது தடை விதிக்க வேண்டும் எனவும், எமக்கு நீதியைப் பெறுவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான மாநில அமைச்சர் லார்ட் அஹ்மட்டிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் daily mirror பத்திரிகையில் பிரசுரமாகி இருந்த கட்டுரையில் தாங்கள் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரசுரத்திற்கு (எதிராக), வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சார்பில் நாம் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்ற நாடு எனும் ஐக்கிய நாடுகள் சபையின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் பிரதிநிதித்துவப்படுத்துவது, அண்மைக் காலங்களில் குறிப்பாக, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை இழந்த தமிழ் மக்களை.
காணாமல் ஆக்கப்பட்டோரில் சிறுவர்களும் குழந்தைகளும் உள்ளடங்கி உள்ளனர். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
இந்த பயணத்தின் போது நீங்கள் சந்திக்கும் அனைவரையும், குறிப்பாக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த, இப்போதைய நாட்டின் ஜனாதிபதியை, எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் கேட்க வேண்டியது கட்டாயம்.
ஒருவேளை உங்களது பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டு அது தொடர்பாக நீங்கள் கேட்கும் போது, மிரட்டப்பட்டும், அச்சுறுத்தப்படும் அவதூறுகள் கூறப்பட்டும், அவர்கள் காணாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம், அவர்களை அழைத்து சென்றது யார் என உங்களுக்கு தெரியாதா எனவும் கேட்கப்பட்டால் உங்களது மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
நாம் கடந்த 13 வருடங்களாக எந்தவித மரியாதையும் இன்றி இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், இப்போது நீங்கள் பொருளாதாரத்தையும் ஈடுபாட்டையும் பற்றி மாத்திரம் முன்னுரிமைப்படுத்தியும், பொறுப்புக்கூறல் தொடர்பாக வெறும் குறிப்பு ஒன்றை மாத்திரம் முன்வைத்துள்ளமையும் நாம் அனுபவிக்கும் மற்றுமொரு துயரமாகும்.
இந்த அரசாங்கம் உண்மையாகவே ஜெனிவா நடைமுறைகளுக்கு ஏற்ப கடந்த காலம் தொடர்பான நிகழ்வுகளை முன்னெடுக்க போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஜேர்மனி சிரியாவிற்கு சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உதவி செய்தது போல நாம் நீதியைப் பெறுவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் எமக்கு உதவி செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
அதுவரையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகள் மீது தடை விதிக்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.