மட்டு. கொக்குவில் பகுதியில் ஆடுகளை திருடிய கும்பல் கைது!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் வீதிகளில் உள்ள ஆடுகளை நீண்டகாலமாக முச்சக்கரவண்டி ஒன்றில் திருடிவந்த கும்பலைச் சேர்ந்த இருவரை நேற்று கைது செய்ததுடன், 14 ஆடுகள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்தி வந்த முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திராய்மடு பிரதேசத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்று காணாமல் போயுள்ளதையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத்தின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் எம்.பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றில் ஆடுகளைத் திருடி எடுத்துச் செல்வதாகத் தெரியவந்ததையடுத்து சம்பவதினமான நேற்று பகல் ஆடுகளைத் திருடிச் சென்ற முச்சக்கரவண்டி மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி வீதியால் பிரயாணிப்பதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதனையடுத்து, பொலிஸார் உடனடியாக குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்து பார் வீதியில் வைத்து முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கமைய ஆடுகளைத் திருடி விற்பனை செய்துவரும் கும்பலுடன் தொடர்புடைய திராய்மடு சேர்ந்த 40 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரியான திராய்மடுவைச் சேர்ந்தவரும் வவுணதீவில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் முச்சக்கரவண்டி செலுத்திவரும் 25 வயதுடையவர் எனவும் இவருடன் அந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 மாதங்களாக இந்த ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த பகுதியில் வெற்று காணிகள் மற்றும் வீதி ஓரங்களில் புல் மேய்ந்து வரும் ஆடுகளை ஆடுமேய்ப்பார்கள் மதிய உணவுக்கு ஆடுகளை அங்கு விட்டுவிட்டுச் செல்லும் போது அந்த ஆடுகளைத் திருடி முச்சக்கரவண்டியில் எடுத்து சென்று விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் புதூரில் ஒருவருக்கு 3 ஆடுகளும், வவுணதீவு கரடிப்புபூவல் ஆட்டுப்பட்டியில் ஒருவருக்கு 6 ஆடுகளும், மட்டக்களப்பு லேக்வீதி சந்தியில் உள்ள ஒருவருக்கு 5 ஆடுகள் உட்பட 14 ஆடுகளைத் திருடி முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருடி விற்பனை செய்த 14 ஆடுகளை மீட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று உட்பட இருவரைக் கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்டுள்ள 4 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆடுகள் திருட்டுப்போயுள்ளதாக 10 பேர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர்கள் தமது ஆடுகளை அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *