
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கை அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்ததாகவும் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க சுகயினம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த 10 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் ஊடாக அவருக்கு விசேட நோய்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனை கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல் நிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளுக்கு கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.