
கொரோனாத் தடுப்பூசியினால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளது.
கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மற்றுமொரு கொரோனா அலையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.