13ஐ தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்கவில்லை: தமிழ் கட்சி ஒன்று மக்களை குழப்புகிறது! சுரேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று விட்டோம் என தமிழ் கட்சி ஒன்று மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்  தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து 13ஐ ஏற்றுவிட்டார்கள் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை அடகு வைத்து விட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்ப முற்படுகிறது.

தமிழர்களுடைய இனப்பிரச்சனை அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார்கள்.

நாம் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு அனுப்பிய அறிக்கையில் 13ஐ அரசியல் தீர்வாக ஏற்கவில்லை இதை மக்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன்.

சமஸ்டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம், இப்போதும் அதையே கூறுகிறோம்.

இலங்கையில் அரசியல் யாப்பில் புறப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறை அற்றுக் காணப்படும் நிலையில் அதனை செயற்படுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கவே நாம் கூடி முடிவெடுத்தோம்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாணசபை அதன் கீழ் வருகின்ற அதிகாரங்களாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் 13க்கு அப்பால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என உறுதி அளித்திருந்தார்.

இந்தியாவுக்கு 13 தொடர்பில் நாம் அழுத்தங்களை வழங்காது இருப்பது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகி விடும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்தை அனுப்பியுள்ளோம்.

இதை சரியாக விளங்கிக் கொண்ட தமிழ் கட்சி ஒன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13ஐ ஏற்று விட்டோம் என கூறி எதிராக மக்களை போராடு வருமாறு ஊடக சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியம் சார்ந்த தலைவர்கள் ஓரணியில் நிற்கும்போது அழைத்த ஒரு கட்சி மட்டும் வெளியில் நின்று கொண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறுகிறோம் 13வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக அமையாத நிலையில் இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் வரலாற்றுத் தவறுகளை விட்டவர்கள் மீண்டும் ஒரு தவறை விடாது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *