தலிபான்களுடனான மோதலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இராணுவ தளபதி மாற்றம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்ற நிலையில், இராணுவ தளபதியை அந்நாட்டு ஜனாதிபதி மாற்றியுள்ளார்.

அரசாங்க ஆதரவு படைகளை ஒன்று திரட்டுவதற்காக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரான மசார்-இ-ஷரீஃபுக்கு சென்றுள்ளார்.

இதன்போது இராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் மாற்றப்பட்டுள்ள செய்தியை, ஜனாதிபதி அஷ்ரப் கனி உறுதிப்படுத்தினார்.

இராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அகமதுசாய், கடந்த ஜூன் மாதம்தான் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். புதிய தளபதி யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த அமெரிக்க- வெளிநாட்டு துருப்புக்கள் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள தலிபான் அமைப்பினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி முக்கிய பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானின் 421 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டிலுள்ள முப்பத்தி நான்கு மாகாணங்களில் குறைந்தது ஒன்பது மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply