
கிளிநொச்சி, புன்னைநீராவி நாதன்குடியிருப்பில் தீயில் எரிந்து தாயும், 17 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11.50 மணியளவில் நடந்துள்ளது.
தீப் பரவலில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது வீட்டில் தாயும், மகளுமே இருந்துள்ளனர். தந்தையும், சகோதரனும் வேலையின் நிமித்தம் வெளி மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர்.
ஆனந்தராசா சீதேவி (வயது-37), ஆனந்தராசா லக்சிகா (வயது-17) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். தீப் பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
குறித்த தாயும் மகளும் நேற்று முன் தினம் இரவே தீயில் எரிந்து மாண்ட போதும், அதுபற்றி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றுமாலையே தகவல் கிடைத்ததாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.