தமிழக மீனவர்களின் 105 கடற் கலங்கள் ஏலத்தில்..! இலங்கை அரசு தீர்மானம்

தமிழக மீனவர்களின் 105 கடற் கலங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டின் பெயரில் தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பல டசின் ட்ரோலர்கள், நாட்டு விசைப் படகுகள் உட்பட 105 கடற்கலங்கள் அரசுடைமையாக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இலங்கை அரசு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

அந்தக் கடற்கலங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்தே அவை பகிரங்க ஏலத்தில் விடப்படவுள்ளன.

இவ்வாறு ஏலத்தில் விடப்படுவது தொடர்பில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்களிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படகுகள் பகிரங்க ஏலத்தில் விடப்படும் நாள்களும், இடமும், கடற்கலங்களின் எண்ணிக்கையும் வருமாறு:-

• பெப்ரவரி 7 ஆம் திகதி – காரைநகர் – 65 கடற்கலங்கள்.

• பெப்ரவரி 8 ஆம் திகதி – காங்கேசந்துறை – 05 கடற்கலங்கள்.

• பெப்ரவரி 9 ஆம் திகதி – கிராஞ்சி – 24 கடற்கலங்கள்.

• பெப்ரவரி 10 ஆம் திகதி – தலைமன்னார் – 09 கடற்கலங்கள்.

• பெப்ரவரி 11 ஆம் திகதி – கற்பிட்டி – 02 கடற்கலங்கள்

அந்தந்த தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்க ஏலம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply