
இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்றுமதியாக அண்மையில் பிலிப்பைன்ஸ் இற்கு ப்ரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்திருந்தமை அமைந்திருந்தது.
பாதுகாப்பு ஏற்றுமதி என்பதைத் தாண்டி அதன் பொருளாதார நலன்களை விட தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவிற்கு ஏற்படும் நெருக்கம் இங்கே பிரதானமான அனுகூலமாகக் கருதப்பட்டது.
ஆனால் இந்தியாவின் இந்த வளர்ச்சியை சீனா கவனிக்க தவறவில்லை. இதற்கு பதில் நடவடிக்கை ஒன்றை விரைந்து மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி, அண்மையில் பிலிப்பைன்ஸ் ஆயுத படைகளிற்கு போரில் பயன்படுத்தாத சாதாரண இராணுவ கருவிகளை பரிசாக வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
இவற்றின் மொத்த பெறுமதி, ஒரு பில்லியன் பிலிப்பைன்ஸ் பெஸோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே வேடிக்கையான விடயம் என்னவென்றால், சீனாவும் பிலிப்பைன்ஸ் உம் தென்சீனக்கடல் பிராந்திய எல்லை விவகாரங்கள் தொடர்பில் முரண்பாட்டில் உள்ளன.
அத்தோடு கடந்த வருடம் இரண்டு நாடுகளும் சீனாவின் அத்துமீறிய கப்பல் நடவடிக்கைகளால் நேருக்கு நேர் இராஜாங்க ரீதியான மோதல்களையும் எதிர்கொண்டிருந்தன. எவ்வாறாயினும் சீனாவிற்கு இப்போது வேறு வழிகள் இல்லை என்பதும் வெளிப்படையான ஒரு விடயம்.
ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அமெரிக்கா இங்கிலாந்து கூட்டணியுடன் இணைந்து சீனாவிற்கு எதிராக பாதுகாப்பு பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்த வாரம் ஜப்பான் சீனாவிற்கு எதிரான கூட்டுறவுகள் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகளின் அடிப்படையில் இந்து பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நோக்கமாகக் கொண்டு பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா ஜப்பானிற்கு ஆயுதங்களைக் குவிக்கவும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முன்வந்துள்ளது, அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு அணு நீர்மூழ்கிக்கப்பல் வழங்கும் aukus அமைப்பில் இணைந்துள்ளன.
அது மாத்திரமன்றி கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன், இணைய திருட்டு தாக்குதல் நடவடிக்கைகளிற்கு எதிராக ஆஸ்திரேலியா இங்கிலாந்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் ஈரானின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவது இதன் நோக்கமாக இருக்கும் எனவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பிராந்திய நாடுகள் சீனாவிற்கு எதிராக பல அதிரடி முடிவுகளை அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளன.
எனவே எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு நாடுகளையும் சீனா பகைத்துக்கொள்வது தனக்கு தானே குழி தோண்டும் விடயமாக இருக்கும் என்பது சீனாவிற்கு புரிந்திருக்கும் என்பதால், இப்போது மெல்ல மெல்ல பிலிப்பைன்ஸ் உடனான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கு இவ்வாறான இலவச உதவிகளை செய்ய முன்வந்துள்ளது என்பது வெளிப்படையான விடயமே.
கடந்த ஜனவரி 16ஆம் திகதி முதலாவதாக சில அனர்த்த முகாமை சார்ந்த இராணுவ கருவிகளை சீனா phillipines இற்கு வழங்கியுள்ளது. இது இந்தியா ப்ரம்மோஸ் களை வழங்குவதற்கான திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து இரண்டு நாட்களின் பின் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிலாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ள அறிக்கைப் படி, முதலாவது தொகுதியில், நீர் சுத்திகரிப்பு கருவிகள், ambulance கள், தீயணைப்பு வண்டிகள், வெடிகுண்டு அகற்றும் கருவிகள், வெடிகுண்டு பாதுகாப்பு ஆடைகள், மற்றும் ட்ரான் தொகுதிகள் என்பன உள்ளடங்கி இருந்ததாக அறியப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் delfin lorensana வின் கருத்துப்படி, இந்த கருவிகளை வழங்குவதாக சீன பாதுகாப்பு அமைச்சர் 2020ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் இற்கு பயணம் செய்த போது வாக்குறுதி அளித்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, தற்போது பிலிப்பைன்ஸ் ஆயுதப்படையில் இவ்வாறான ஆயுதங்கள் கருவிகள் என்பன பற்றாக்குறையாக உள்ளமையால் இது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான உதவியாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
கடந்த வருடம் இருந்த நிலைக்கு இவை முற்றிலும் எதிர்மாறாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. கடந்த வருடம் சீனாவின் 200 மீன்பிடி படகுகள் பிலிப்பைன்ஸ் எல்லையினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. சில மாதங்களிற்கு முன்பு, பிலிப்பைன்ஸ் படகுகள் இரண்டின் மீது சீன கப்பல்கள் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தது.
2016ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் சீனா-பிலிப்பைன்ஸ் இடையே இருந்த உரிமை கோரல் எல்லை விவகாரங்களில் பிலிப்பைன்ஸ் இற்கு ஆதரவாகத் தீர்ப்பு வாங்கியிருந்தாலும் சீனா இதுவரையில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, வரலாற்று ரீதியான தேசப்படம் எனக் கூறும் ஒரு அடையாளத்தின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் இற்கு சொந்தமான பகுதிகள் சீனாவிற்கு உரியவை எனக் கூறி வந்தது.
ஆனால் இப்போதைய கருத்துப்படி, மணிலாவின் ஐந்தாவது ஒன்றிய கூட்டத்தில் உரையாற்றிய சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யி கூறும்போது, இரண்டு நாடுகளும் தமக்கென சில கருத்தேற்புகளைக் கொண்டுள்ளன. இரண்டும் அவற்றின் அடிப்படையில் உரிமைகளை முன்வைக்கின்றன. இந்த கருத்து வேறுபாடுகள் நீண்ட பல்தகைமை கொண்ட இருதரப்பு உறவுநிலைகளைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.
சீனாவின் இந்த திடீர் மாற்றம் நேரடியாகவே மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் தொடர் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் phillipines இடம் ஆதரவு கோருவது போன்ற நிலையை வெளிப்படுத்துகிறது.