முந்தலில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை

புத்தளம் – முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி பிரதேச கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடற்பிரதேசத்தில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இவ்வாறு இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதை அவதானித்து அதுபற்றி, ஆனைவிழுந்தான் வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கிய 45 – 50 கிலோ கிராம் நிறையுள்ள குறித்த கடல் ஆமையின் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் மட்டும் புத்தளம் மாவட்டத்தில் பல கடல் ஆமைகளும், பல டொல்பின்களும், சுறா மீன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், சகல கடல்வாழ் ஆமைகள், அதனது குஞ்சுகள் மற்றும் முட்டைகள் என்பன இலங்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல தொன் நிறைகொண்ட இரசாயனம் கடல் நீரில் கலந்துள்ளமையால் தான் இவ்வாறு கடல் ஆமைகளும், மீன்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தொர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

எனினும், குறித்த கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கான காரணங்களை கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *