நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவளக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்புற்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 167 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சிடாஸ் கனடா அமைப்பின் அனுசரணையுடன் சிடாஸ் கல்முனை கல்வி மாவட்டக் கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை Avnicanada.com அமைப்பின் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான திரு.நமு பொன்னம்பலம் அவர்கள் சிடாஸ் கனடா அமைப்பினூடாக வழங்கியிருந்தார். இவர் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து சிடாஸ் அமைப்பினூடாக வழங்கிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன் குறித்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர்.
மேலும் சிடாஸ் கல்முனை கல்வி மாவட்டக் கிளையின் தலைவர் திரு.ம.றோகனகாந்தன், செயலாளர் திரு.ந.துசியந்தன் மற்றும் திரு.இ.சுஜீவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் சிடாஸ் அமைப்பின் இணைப்பாளர் திரு.எம்.புவிராஜா அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர் கற்றலில் பெற்றோர்களின் பங்களிப்புத் தொடர்பாக விழிப்புணர்வுச் சொற்பொழிவை ஆற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.