
கொழும்பு அரசியல் பரப்பில் ஆளும்தரப்பில் அங்கம்வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்படுத்திவரும் நெருக்கடி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் தற்போதே பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. இதனையே இன்றைய ஆய்வில் பார்க்க இருக்கின்றோம்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படும் டயானா கமகே முன்வைத்துள்ளார்.
டயானா கமகே ஏற்கனவே கஞ்சா பயிரிட வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில் டயானா கமகேவுக்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே நான் கருதுகின்றேன்.
அவர் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ள வேண்டும் என்று நிலைப்பாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாதுபோன இரண்டு வருடகாலத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தையும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கவேண்டும் என டயானா கமகே சபையில் யோசனையொன்றை முன்வைத்தார்.
அவரது யோசனையின் பிரகாரம் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் நீடிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அபிப்பிராயம் என்னவென்று வினவியபோதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களால் நீடிக்கவேண்டும் என்று டயானா கமகே கூறினாலும், இவ்விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அவர் இதற்கு உடன்பட வேண்டும் அல்லவா? ஜனாதிபதி இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பதாக நான் கருதவில்லை.
அதுமாத்திரமன்றி எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்னரொருபோதும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்ததால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நான் ஜனாதிபதியாக இருந்தபோது எனது பதவிக்காலத்தைக் குறைத்துக்கொண்டேன்.
அந்தவகையில் வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தமது பதவிக்காலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கு முற்படுவார்கள் என்று நான் கருதவில்லை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை,தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானமில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார் .
அடுத்த 3 வருடங்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவோம் . எங்களுக்குப் பதவி காலத்தை நீடிக்க எந்த அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில் நாட்டில் புரையோடிப்போயிருக்கும் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதை தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களையும் கையாள முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகற்கனவு கண்டு கொண்டிருக்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக சாடியுள்ளார்.
அத்துடன், இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால் தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது எனக் குறிப்பிட்ட சம்பந்தன் போரின் காரணமாகவும் அக்காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்க்குள் சென்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
செல்வநாயகம் போன்ற தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனக் குழுமத்தினரும் சமத்துவமாகவே விரும்பினார்கள். அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தார். ஆனால் அவர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தென்னிலங்கை பெரும்பான்மைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள்.
இதன், விளைவாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்து தனிநாடு கோரி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது 12ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை நாம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றோம்.
இவற்றையெல்லாம் மறந்து விட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாதது போல் கருத்துக்களை வெளியிடுகின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கருதுவது அவருடைய உரையில் மிகத் தெளிவாக உள்ளது.
அவ்விதமாக அவர் கருவாராக இருந்தால் அது அவர் காணும் பகற்கனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது வேறு எந்த விடயங்களிலும் நிரந்தரமான தீர்வினை அடைய முடியாது. இது ஜனாதிபதிக்கு புரியவில்லை.
அவர், தான் பெரும்பான்மை மக்களினதும்ரூபவ் கடும்போக்கு பௌத்த தலைவர்களினதும் ஆதரவோடு ஆட்சிப் பீடம் ஏறியவர் என்பதால் அவர்களை மட்டும் திருப்திப் படுத்தினால் போதும் என்று கருதுகின்றார். அவர் அதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.
ஆனால் அவர் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். கோட்டாபய உட்பட அவருடைய சகோதரர் மஹிந்த , மைத்திரிபால, ரணில் , சந்திரிகா, பிரேமதாஸ, என்று அனைத்து தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அதனால், அவர்கள் உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சர்வதேச நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.
அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய திடீரென்று விழித்தெழுந்தவர் போன்று எவ்வாறு இனப்பிரச்சினையே இல்லை என்று கூற முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இனியும் இவர்களிடத்தில் நீதி, நியாயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கப்போவதுமில்லை.
ஆகவே, தமிழ் மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டினை நாம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், அனைத்தினதும் கவனத்திற்கு இந்த விடயத்தினை நகர்த்தவுள்ளோம்.
தற்போதைய நிலையில் நாடு பொருளாதார நிலையில் மீளமுடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணம் போர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியிருந்தால் இந்த போரே மூண்டிருக்காது. இந்தப் போரினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கான பரிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.
இதேநேரம், இந்தப் போருக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்துள்ளது. இதானால் பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து தற்போது மோசமடைந்துள்ளது. குறிப்பாக போர்க்காலத்தின்போது வரையறைகளின்றி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
அச்சமயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தினை வெகுவாக தாக்கியுள்ளது.
ஆகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது.
தென்னிலங்கை பெரும்பான்மை மக்களையும்ரூபவ் பௌத்த தேரர்களையும் மையப்படுத்தி தமது விரும்பத்திற்கேற்றவாறாக ஆட்சியை முன் கொண்டு செல்வதானது எதிர்காலத்திற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தில் எதனையுமே நடைமுறைப்படுத்தாது உள்ளது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்- என்றார்.
இதேவேளை, அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதே முக்கியம். அவற்றைத் தீர்த்து வைப்பது தொடர்பிலேயே முதலில் நாம் கவனம் செலுத்துகின்றோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் காரசாரமாக விமர்சித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சு முன்னெடுக்கப்படுமா என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும்.
அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம்.
எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு – அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது. இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது.
நாட்டை முன்நகர்த்தும் செயற்பாடுகளுக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்றார்.
ஒரு பக்கம் பதவி நீடிப்பு தொடர்பான சர்ச்சை மறுபக்கம் பதவியில் இருந்து இதுவரை செய்தது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது பரிதவிக்கும் நிலையில் கோட்டாபய தலைமையிலான ராஜபக்ஷ அரசாங்கம் உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? அல்லது உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படுமா? என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.