கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முன்னாள் போராளி கைது

கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முன்னாள் போராளி ஒருவரை களுவாஞ்சிக்குடியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர், அம்பாறை- திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றினை எடுத்துச் சென்ற வேளையிலேயே விசேட அதிரடிப்படையினரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த  இரகசிய தகவலுக்கமைய  குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினர்  கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  நேற்றைய தினம் குறித்த நபர் வீட்டில் இருந்து மோட்டர்சைக்கிளில் கைக்குண்டு ஒன்றை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனைக்காக எடுத்துக் கொண்டு பிரயாணித்த வேளையில் புலனாய்வு பிரிவினர், அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு புலனாய்வு பிரிவினர் பின்தொடர்வதை கண்ட சந்தேகநபர், எடுத்துவந்த குண்டை அந்தபகுதியில் எறிந்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, அவரை விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் சுற்றிவளைத்து,  மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *