செஞ்சோலை வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு

முல்லைத்தீவு – செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும்.

இந்நிலையில் அஞ்சலி செலுத்துவதற்காக படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்துக்கு சென்ற படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (14) காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது.

வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளின் பெற்றோர் சிலர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இராணுவம், பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பூக்கள் மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர்.

மேலும் அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *