2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் 4ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
Advertisement
இந்த வழக்கு தொடர்பாக கடந்தவாரம் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் விளக்கமளித்திருந்தனர்.
இதன்போது, 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றியிருந்த யுவதியொருவர், சந்தேகநபரினால் இருவேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


