பொகவந்தலாவை – ஆரியபுர பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெறவிருந்த
திருமண நிகழ்வொன்று பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் இன்று (20)
காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில்,
சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார்
25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த
திருமண மண்டபத்துக்கு விரைந்த பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார்
அங்கு கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.
Advertisement
அத்துடன், மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் மாத்திரம் திருமணத்தை
நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும்.


