இலங்கையில் இதுவரை 209 மருத்துவர்களுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மருத்துவர்களில் 30 தொடக்கம் 40 வரையானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒரு மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்களும், ஹோமாகம மருத்துவமனையைச் சேர்ந்த 17 மருத்துவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதுவரை 3 மருத்துவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 1000 தாதியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 37 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


