அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை ஏற்று மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
அத்துடன் வீதிகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது, அத்தியவசிய தேவைக்காக வெளியில் நடமாடுபவர்கள் தவிர அவசியமில்லாமல் வெளியில் நடமாடுவது குறித்து கடுமையாக கண்காணித்து வருவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையான பிரதேசங்களில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அது போல் பிரதேசங்களில் உள் வீதிகளும் சன நடமாட்டமற்று காணப்பட்டது.


