ராஜிதவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பு வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!SamugamMedia

சர்ச்சைக்குரிய வெள்ளைவான் வழக்கின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவர் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வெள்ளைவான் வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கின் இரண்டாவது சாட்சியான அதுல சஞ்சீவ மதநாயக்க, தாம் பொய் சாட்சியம் வழங்கியமையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்து பொய்யான வாக்குமூலங்கள் வழங்கியமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியான மதநாயக்க வெள்ளைவான் ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியது தனது வாழ்வில் எதிர்கொண்ட உண்மை சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அப்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் செல்வாக்கு காரணமாக கொழும்பு பிரதான நீதவானிடம் பொய்யான வாக்குமூலமொன்றை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப நல்வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்த பிறகு இந்த தவறான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டின் பேரில் முதலாவது சாட்சியான சரத்குமாரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *