இலங்கையில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில்! 12,000 ரூபா சிக்கியது; மக்களுக்கு அவசர எச்சரிக்கை SamugamMedia

திருகோணாமலை கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் (05) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இப்போலி நாணயத்தாளை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து  போலி நாணயத்தாளை கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் கிண்ணியா உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜித குருசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற  விசாரணைகளை அடுத்து இப்போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட அச்சகத்தினை சேர்ந்த மற்றுமொரு  நபரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இருவரும் சேர்ந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிடப்பட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கிண்ணியா பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் எனவும்  பொலிசார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு போலியாக அச்சிடப்பட்ட 88 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் கிண்ணியாவில் புழக்கத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் அவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயல்படுமாறும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *