மன்னார் காற்றாலை மின்சார விவகாரம், இந்திய மீனவர்களால் ஏற்படும் பாதிப்பு: வடக்கை முடக்கி பாரிய போராட்டம் SamugamMedia

மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்பட உள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் செயல் திட்டம் குறித்தும் இந்திய மீனவர்களால் தொடர்ந்து ஏற்படும் பாதிப்பு குறித்தும் வடமாகாண ரீதியாக அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்பட உள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப் பெற்று வரும் நிலையில், குறிப்பாக இரண்டாம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் அதானி குழுமத்திற்குத் திட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06.03.2023) மாலை பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர், பொது அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் ஒன்று கூடிக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தீவுப் பகுதி மக்களிடமும் பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கையெழுத்து பெறப்பட்டுச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் சர்வதேச ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் அமைப்பது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில், மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக மன்னார் மாவட்ட பகுதி மக்களிடம் இரண்டாம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கான சுற்றுப்புறச் சூழல் தொடர்பான அறிக்கைகள் மக்களிடமிருந்து அரசாங்கம் கோரி இருந்தது.

இதற்கமைவாகக் குறித்த அறிக்கை ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீவுப் பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் கையெழுத்துப் பிரதிகள் குறித்த தரப்பினரிடம் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன், முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைக்குச் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் குறித்த கையெழுத்துப் பிரதிகள் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமிறிய வருகையால் மாவட்ட பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் நஷ்டத்தை எதிர் நோக்குவது குறித்துக் குறித்த கூட்டத்தில் பேசப் பட்டு பாரிய அளவிலான மாவட்ட ரீதியாகவும் வடமாகாண ரீதியாகவும் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போராட்டம் முன்னெடுப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *