கோட்டாவை மிஞ்சிய ரணில்…! ஆட்சி மாற்றத்தின் போது பதில் கூறாதவர்களுக்கு விளக்கமறியலில்-எஸ்.எம்.மரிக்கார் கருத்து!SamugamMedia

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் தாண்டிய ஜனநாயக படுகொலைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை மீறியுள்ள ஜனாதிபதி தேர்தலையும் இல்லாமல் செய்துள்ளதாக எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று ரணில் விக்கிரமசிங்க வாயளவில் வீரம் பேசுகின்ற நபராக மாறியுள்ளதாக எஸ்.எம்.மரிக்கார் சபையில் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரங்களை பறிக்கின்ற நபராக ரணில் மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிக்கும் பொது பிரதமர் உட்பட சில தலையாட்டி பொம்மைகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்வதாக எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்திருந்தார்.

தேர்தலுக்கு நிதியில்லை என கூறுகின்ற அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய எஸ்.எம்.மரிக்கார்,  அதிகரித்த மின்கட்டணத்தின் மூலம் பெறப்பட்டிருந்த நிதி எங்கே? எனவும் விமானநிலையத்தின் ஊடாக வருகின்ற வரிக்கான நிதி எங்கே? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.

எனவே அடுத்த ஆட்சி மாற்றத்தின் போது ஜனநாய விரோத செயல்களில் ஈடுபட்ட அனைவரும் விளக்கமறியலுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *