நாளை போக்குவரத்து சேவைகள் முடங்குமா? வெளியான அறிவிப்பு SamugamMedia

நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

மேலும் அந்த சேவைகளை இயக்க போதிய பஸ்கள் இல்லை என்றால் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மக்கள் சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவர்களாக இருந்தாலும், பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தொழிலாளர்கள் பட்டினி கிடக்க நேரிடும்.

எனவே எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு வரை பஸ் சேவைகளை தடையின்றி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரி கொள்கைக்கு எதிராக இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

மேலும், திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளை (15) காலை 9 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அகில இலங்கை தாதியர் சங்கம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரச ஆதரவு தொழிற்சங்கக் கூட்டு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் இந்த வாரம் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள 48 மணி நேர சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் சகல மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *